Friday, September 10, 2010

இல்லாது இருத்தல்

உனக்குகந்த பொய்களை
உண்மையின் சாயம் பூசி
உன்னிடம் பேசிப் பேசி
கசந்து போகின்றன என் உண்மைகள்

உன்னுடைய ஓவியங்களை
உண்மையில் இயற்க்கை என்று
உன்னிடம் சொல்லி சொல்லி
இற்றுப் போகின்றன என் இயற்கைகள்

உன்னுடைய குரலை என்றும்
உண்மையில் குழல்தான் என்று
உன்னிடம் சொல்லி சொல்லி
மரத்துப் போகின்றன என் ராகங்கள்

உன்னுடைய இதழை என்றும்
உண்மையில் கனியே என்று
உன்னிடம் சொல்லிச் சொல்லி
உவர்த்துப் போகின்றன என் ருசிகள்

உன்னுடைய கண்களை என்றும்
உண்மையில் கனிவே என்று 
உன்னிடம் சொல்லிச் சொல்லி
பறி போகின்றன என் பார்வைகள்

உனக்கில்லா எல்லாவற்றையும்
உண்மையில் உனதே என்று
உன்னிடம் சொல்லிச் சொல்லி
இழந்து கொண்டிருக்கிறேன் என்னை

No comments: