Tuesday, October 16, 2012

ஒளி வண்டு

நெடுக்கை உலகின் உணர்வொழிந்து
கிடக்கை உலகின் உணர்வெழுந்து
படுக்கை
பின் மிதக்க மறக்க -

கனவின் நிழலில் தெளிந்தவை
நனவின் ஒளியில் உருமறைய
கனவை மீட்கப் போராட்டம்
அமிழ்ந்தும் எழுந்தும் மிதந்தும்

ஓடம் செலுத்திப் போகையில்
சிவந்து தவிக்கும் நீரில்
பச்சைத் தாமரை
காற்றில் நூலாடும் ஒளிவண்டு
ங்கொய் ய் ய் ய்
பிறிதொரு தாமரை கண்ணுற
ஒளிவண்டு
ஒரு வண்டா ? ஒரே வண்டா ?
இரு மலர்களை ஒரே சமயம்
கண்ணுற இயலா ஓடப் பயணத் தவிப்பில்
கலைந்த கனவு 
சிவப்பாய்க் கவிந்த இருளில்
காட்சிகள் மறைந்து
காதில்  ங்கொய் ய் ய் ய்




No comments: